லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் தனது காட்சிகளை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் ‘லியோ’ படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது வெளியே வந்தவர்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரியா ஆனந்த், கதாசிரியர் ரத்தினகுமார் ஆகியோருடன் நடிகர் கதிரும் வெளியேறினார்.
இதுவரை கதிர் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது அவர் ‘லியோ’ படக்குழுவினருடன் தங்கியிருப்பது இப்படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் கதிர், விஜய்யுடன் ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.